The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Ascending stairways [Al-Maarij] - Tamil translation - Omar Sharif
Surah The Ascending stairways [Al-Maarij] Ayah 44 Location Maccah Number 70
(நிராகரிப்பாளர்களுக்கு) நிகழக்கூடிய தண்டனையை (அது உடனே இறங்கட்டும் என்று) கேட்பவர் கேட்டார்.
நிராகரிப்பாளர்களுக்கு (அந்த தண்டனை நிகழும்). அதை தடுப்பவர் ஒருவரும் இல்லை.
உயர்வுகளும் மேன்மைகளும் உடைய அல்லாஹ்விடமிருந்து (அது நிகழும்).
வானவர்களும் ஜிப்ரீலும் அவன் பக்கம் ஒரு நாளில் ஏறுகிறார்கள். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது.
ஆகவே, அழகிய பொறுமையாக நீர் பொறுப்பீராக!
நிச்சயமாக இவர்கள் அதை தூரமாக பார்க்கிறார்கள்.
நாம் அதை சமீபமாக பார்க்கிறோம்.
வானம் எண்ணெயின் அடி மண்டியைப் போல் ஆகிவிடுகிற நாளில்,
இன்னும், மலைகள் முடிகளைப் போல் ஆகிவிடுகிற நாளில் (அந்த தண்டனை நிகழும்.)
ஒரு நண்பன் (தனது) நண்பனைப் பற்றி விசாரிக்க மாட்டான்.
அவர்கள் அவர்களை (நண்பர்கள் நண்பர்களை) காண்பிக்கப்படுவார்கள். அந்நாளின் தண்டனையிலிருந்து (விடுதலை பெற) தன் பிள்ளைகளை ஈடாக கொடுக்க வேண்டுமே என்று குற்றவாளி ஆசைப்படுவான்.
இன்னும், தன் மனைவியையும் தன் சகோதரனையும்,
இன்னும், தன்னை அரவணைக்கின்ற தன் குடும்பத்தையும்,
இன்னும், பூமியில் உள்ளவர்கள் அனைவரையும் (ஈடாக கொடுக்க வேண்டுமே என்று ஆசைப்படுவான்). பிறகு, அது அவனை பாதுகாக்க வேண்டும் (என்றும் அந்த குற்றவாளி ஆசைப்படுவான்).
அவ்வாறல்ல. நிச்சயமாக அது கொழுந்து விட்டெரியும் நெருப்பாகும்.
(அந்த நெருப்பானது, தலை இன்னும் உடலின்) தோலை கழட்டிவிடக்கூடியதாக இருக்கும்.
அ(ந்த நெருப்பான)து (அல்லாஹ்வின் மார்க்கத்தை) புறக்கணித்து, விலகி சென்றவர்களை அழைக்கும்.
இன்னும், (செல்வங்களை) சேகரித்து, (அவற்றை) பாதுகாத்து வைத்தவனை (அது அழைக்கும்).
நிச்சயமாக மனிதன் பேராசைக்காரனாக படைக்கப்பட்டான்.
அவனுக்கு தீங்கு ஏற்பட்டால் மிக பதட்டக்காரனாக,
அவனுக்கு வசதி ஏற்பட்டால் (பிறருக்கு தனது செல்வத்தை கொடுக்காமல்) முற்றிலும் தடுப்பவனாக (படைக்கப்பட்டான்).
(ஆனால்,) தொழுகையாளிகளைத் தவிர.
அவர்கள் தங்கள் தொழுகையில் நிரந்தரமாக இருப்பார்கள்.
இன்னும், அவர்களுடைய செல்வங்களில் குறிப்பிட்ட உரிமை உண்டு,
யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும்.
இன்னும், அவர்கள் (தீர்ப்பு கொடுக்கப்படும்) கூலி நாளை உண்மைப்படுத்துவார்கள்.
இன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் தண்டனையைப் பயப்படுவார்கள்.
நிச்சயமாக அவர்களுடைய இறைவனின் தண்டனை பயமற்று இருக்கக் கூடியது அல்ல.
இன்னும், அவர்கள் தங்கள் மர்மஸ்தானங்களை பாதுகாப்பார்கள்.
தங்கள் மனைவிகள்; அல்லது, தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடம் தவிர. நிச்சயமாக இவர்கள் பழிக்கப்பட மாட்டார்கள்.
ஆக, யார் இவர்களுக்குப் பின் (தவறான வழியை) தேடுவார்களோ அவர்கள்தான் எல்லை மீறி(ய பாவி)கள் ஆவர்.
இன்னும், அவர்கள் தங்கள் பொறுப்புகளையும் தங்கள் உடன்படிக்கையையும் கவனமாக பேணி பாதுகாப்பார்கள்.
இன்னும், அவர்கள் தங்கள் சாட்சியங்களை நிறைவேற்றுவார்கள்.
இன்னும், அவர்கள் தங்கள் தொழுகையை கவனமாக கடைப்பிடிப்பார்கள்.
அ(த்தகைய)வர்கள் (அனைவரும்) சொர்க்கங்களில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
ஆக, நிராகரித்தவர்களுக்கு என்ன ஆனது? அவர்கள் (ஏன்) உம் பக்கம் விரைந்து வருகிறார்கள்,
வலது புறத்தில் இருந்தும் இடது புறத்தில் இருந்தும் பல கூட்டங்களாக.
அவர்களில் ஒவ்வொரு மனிதனும் - (நம்பிக்கையாளர்களுடன் சேர்ந்து) தாமும் “நயீம்” (-இன்பம் நிறைந்த) சொர்க்கத்தில் நுழைக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களா?
அவ்வாறல்ல. நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்ற ஒன்றிலிருந்துதான் (-அற்பமான இந்திரிய துளியிலிருந்துதான்) படைத்தோம்.
ஆக, கிழக்குகள், இன்னும் மேற்குகளுடைய இறைவன் மீது சத்தியம் செய்கிறேன்! நிச்சயம் நாம் ஆற்றல் உள்ளவர்கள்,
இவர்களை விட சிறந்தவர்களை மாற்றிக் கொண்டு வருவதற்கு (நாம் ஆற்றல் உள்ளவர்கள் ஆவோம்). நாம் பலவீனமானவர்கள் அல்ல.
ஆக, அவர்களை விட்டுவிடுவீராக! அவர்கள் (தங்கள் பொய்களில்) மூழ்கி இருக்கட்டும்! (தங்கள் உலக காரியங்களில், வீண் விளையாட்டுகளில், வேடிக்கைகளில்) விளையாடட்டும்! இறுதியாக, அவர்கள் எச்சரிக்கப்பட்ட அவர்களது (தண்டனைக்குரிய) நாளை அவர்கள் சந்திப்பார்கள்!
அவர்கள் புதைக்குழிகளில் இருந்து விரைவாக வெளியேறுகிற நாளில், அவர்களோ (நிறுத்திவைக்கப்பட்டுள்ள) கம்பத்தின் பக்கம் விரைந்து ஓடுகிறவர்கள் போல் (விரைந்து ஓடி வருவார்கள்).
அவர்களின் பார்வைகள் (இழிவால்) கீழ்நோக்கி இருக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும். இதுதான் இவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த (மறுமை) நாளாகும்.